search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்கள் தாக்குதல்"

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களையும் சந்தித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், ஆர்.டி.ஓ. ஷேக் அயூப் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மணி மூர்த்திஸ்வரம் தாமிர பரணி ஆற்றங்கரையில் அப்பகுதியை சேர்ந்த பட்டியல் இன வாலிபர்கள் மாரியப்பன், மனோஜ்குமார் ஆகியோரை கடந்த 30-ந்தேதி அங்கு நின்ற கும்பல் தாக்கி அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் துரித விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட இருவரும் நெல்லை பன்னோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குனர் ரவிவர்மன் இன்று நெல்லைக்கு, வந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். முதலாவதாக சம்பவம் நடந்த மணி மூர்திஸ்வரம் ஆற்றுப்பகுதியை பார்வையிட்டார். மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களை சந்தித்து நடந்த சம்பவங்களை கேட்டறிந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மணி மூர்த்தீஸ்வரம் சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் நேரில் சென்று விசாரணை செய்ய உத்தரவிட்டத்தின் பேரில் இன்று நெல்லையில் ஆய்வு செய்துள்ளேன். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டோம். அவர்களின் குடும்பச்சூழல் குறித்தும் விசாரிக்கப்பட்டது.

    தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களையும் சந்தித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதா? தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இருந்த போதும் நாங்களும் சம்பவம் குறித்து விசாரணை செய்துள்ளோம். இந்த விசாரணை குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவரிடம் விரைவில் அறிக்கை அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், ஆர்.டி.ஓ. ஷேக் அயூப் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • பிடிப்பட்ட 2 பேரை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
    • வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதி மக்கள் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தில் நேற்று ஒருவர் இறந்து விட்டார். இவரது உடலை அடக்கம் செய்வதற்கு இறுதி சடங்கு நடந்தது. இதில் பங்கேற்க வந்தவர்களில் 6 வாலிபர்கள் போதையில் இருந்துள்ளனர்.

    இறுதி சடங்கு நடந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டின் தென்னை மரத்தில் இருந்த தேங்காய்களை பறித்தனர். இதனை அங்கிருந்த ஆறுமுகம் தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் அவரை தாக்கினர். இதைதடுக்க வந்த ஆறுமுகத்தின் மகன் சீனிவாசனையும் அவர்கள் தாக்கினர். தொடர்ந்து அப்பகுதியினர் திரண்டு வந்த நிலையில் 6 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து, இரவு 11 மணிக்கு அந்த வாலிபர்கள் மீண்டும் புளியங்குடி பகுதிக்கு பட்டாக்கத்திகளுடன் வந்து, அந்த பகுதியினரை ஆபாசமாக திட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த அப்பாஸ் (வயது 38) என்பவரை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டினர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அவர்களை பிடிக்க முற்பட்டனர். அதில் 2 பேர் மட்டும் பொதுமக்களிடம் பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிப்பட்ட 2 பேரையும் கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

    மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதி மக்கள் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர். கத்திவெட்டில் படுகாயமடைந்த அப்பாசை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் பிடிப்பட்ட 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • போதை வாலிபர்கள் மீண்டும் பேருந்துக்கு வழி விடாமல் சென்றுள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    காங்கயம்:

    ஈரோட்டில் இருந்து பழனிக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை டிரைவர் மேகநாதன் ஓட்டினார். இந்தநிலையில் அரச்சலூர் அருகே வடபழனி பகுதியில் இருந்து இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் போதையில் வந்தனர். அவர்கள் அரசு பேருந்திற்கு வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து பேருந்து ஓட்டுனர் இளைஞர்களின் வாகனங்களை நோக்கி ஹாரன் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் மீண்டும் பேருந்துக்கு வழி விடாமல் சென்றுள்ளனர்.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசு கலைக்கல்லூரி பஸ் நிறுத்தத்தில் மாணவர்களை ஏற்றி கொண்டு பேருந்து புறப்பட்ட போது இருசக்கர வாகனங்களில் வந்து பேருந்தை வழிமறித்த போதை வாலிபர்கள் சட்டை இல்லாமல் அரை குறை ஆடையுடன் டிரைவருடன் ரகளையில் ஈடுபட்டனர்.

    பின் டிரைவர் மேகநாதன் சட்டையை பிடித்து இழுத்து நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினர். பயணிகள் இளைஞர்களிடமிருந்து டிரைவரை மீட்டனர்.இது குறித்து டிரைவர் மேகநாதன் காங்கேயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    இதனிடையே அரசு பஸ் டிரைவர் தாக்கப்படுவதை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×